என்ன இப்படி ஆயிடுச்சு!!!
அதிரதன் திகைத்தான். முகம் பார்த்து பேசுகிறாள்… தயக்கம் இல்லாமல் சிரிக்கிறாள்… அவனை கேர் செய்கிறாள்.. பழைய கதைகளை பேசும் சமயம் அவனுடைய கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தும் நெருக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்தது தவறாகி விட்டதே! அவள் டைவர்ஸ் முடிவிலிருந்து சிறிதும் மாறவில்லை.
அவனுக்குள் இன்னொரு எண்ணம் திடுக்கென உதித்தது. அவனுக்கு அதிதி தந்த ‘மனிதருள் மாணிக்கம்’ பட்டதின் வரலாறு அப்பாவிற்கு தெரிந்தால் அவனை மதிக்கவே மாட்டாரே!
அதிதி கண்களில் பெருமிதம் பொங்க ‘நண்பேண்டா’ பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு அப்பா தரப்போகும் ரியாக்ஸன் கனவாக தெரிந்தது.
“தேங்க்ஸ் அதிதி… உன்னுடைய குட்புக்கில் நான் இருக்கிறேன். ஐம் ஹாப்பி. ஆனால் இப்போது என்னிடம் நீ ‘எடுத்து சொன்ன’ சம்பவங்களை வெளியே யாரிடமும் சொல்லி விடாதே…” என்றவன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
‘கடுகளவு கசிஞ்சாலும் என் மானமே போயிடும்மா… விளங்காத பையன்னு பேராயிடும்‘
“ஏன் சொல்லக் கூடாது?”
“அது… அப்படித்தான்…”
“சரி… இதப்போய் நான் யாருகிட்டே சொல்லப் போறேன்.” அவள் ஒப்புக் கொண்டாள்.
அன்றைய பொழுது கழிந்தது. அன்று இரவும் முதல் நாள் போலவே ஆரம்பித்தது. அதிதியின் அப்பாபற்றி அவன் தெரிந்து கொண்டான். குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர். ஜான்சி ராணியில் ஆரம்பித்து கல்பனா சாவ்லாவரையான மதிப்புமிகு பெண்களின் கதைகளை சொல்லி அவர்களை வளர்த்தார். பெண் பிள்ளைகள் என்று அலட்சியமாக நினைக்காமல் அவர்களை ஆண் பிள்ளைகள் போலவே வளர்த்தாராம்…
அதிலும் அதிதியின் அக்கா ரொம்பவும் சுட்டியான பெண்! பத்து வயதிலேயே விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தாளாம். அதிலும் உயரம் தாண்டுதலில் சாதனை பதித்தாளாம். அந்த அளவிற்கு அதிதி விளையாட்டில் சிறக்கவில்லை… ஆனால் படிப்பில் கெட்டியாக இருந்தாள். தமிழ் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சரளமாக பேசுவாளாம்..
இந்த விசயங்களை பேசியபோது அதிரதனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவளுடைய அப்பா ஒரு மருத்துவர் ஆனால் ஏன் அந்த கிராமத்தில் இருந்தார்? நகரத்தில் நல்ல பணியில் இருந்திருக்கலாமே?
“அது ஏன்னா… கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம்…”