போட்டோவை காட்டி தான் புடிச்சு வெச்சுருக்கேன். இன்னைக்கு ஒரு நாளு சொஜ் கரோ (தூங்கு)..." என்று லட்சுமியிடம் சொன்னவள், அருகிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றாள்.
வந்து சென்ற பெண்ணின் உடை, அவளின் அதீத ஒப்பனை எல்லாம் லக்ஷ்மியை பயமுறுத்தியது.
அருகே இருந்த பெண் அவளின் தோளில் கை வைத்தாள் அவளின் நிலை புரிந்ததை போல.
"இங்க வீட்டு வேலை செய்ய வந்துருக்கோம் தான?" மீண்டும் அதே கேள்வி.
"உன் பேரு என்ன?" அந்த பெண் கேட்க, "லட்சுமி" என்றாள்.
"லட்சுமி...ஹ்ம்ம் நல்ல பேரு...உனக்கு ஒரு இருபது வயசு இருக்குமா?" -அந்த பெண் கேட்க, இல்லை என தலை அசைத்தவள் "பதினெட்டு" என்றாள்.
"பதினெட்டு...ரொம்ப ஆபத்து...என்ன கேட்ட...வீட்டு வேலையா...ஹ்ம்ம் ஒரு வகைல வீட்டு வேலை தான்...ஆனா வேலை சமையல் அறையிலோ இல்லை துவைக்கிற இடத்திலோ இல்லே...எப்பவும் ஒரே அறை தான்..." அந்த பெண் பேச பேச லக்ஷ்மியின் கண்கள் இருட்டி கொண்டு வந்தது.
எங்கே வந்திருக்கிறோம் என புரிந்தது அவளுக்கு. எப்படி இங்கே வந்தோம்...ஐயோ கடவுளே அந்த ஆள் ஏமாற்று காரனா...அய்யயோ...என்ன செய்வேன்...எப்படி இங்கிருந்து தப்பிப்பது...அவள் யோசித்து கொண்டிருக்கையிலேயே "நீ தூங்கு...அப்பறம் தூங்கவே முடியாது" என்றவள் எழுந்து அந்த அறையின் கதவை அடைத்து விட்டு வெளியே சென்றாள்.
மெல்ல எழ முயன்ற லக்ஷ்மிக்கு கால்கள் துவண்டது. ஒருவாறு எழுந்து அங்கிருந்த அந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளியே பார்த்தாள்.
கடவுளே...எத்தனை பெண்கள்...அங்கங்கே பெரிய உடலோடு சில ஆண்கள் காவல் காப்பதை போல...அரையும் குறையுமான ஆடையில் ஏதோ ஒரு ஆடவனோடு...பார்க்கவே கண்கள் கூசியது லக்ஷ்மிக்கு. கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் என்ன பாவம் செய்தேன்...எனக்கெதற்கு இப்படி ஒரு நிலை என. அழுது அழுது ஓய்ந்தவள் மனதில் எப்படியாவது இரவில் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. வெளியே கேட்ட சிரிப்பு சத்தங்களும் பேச்சு குரல்களும் லக்ஷ்மிக்கு குமட்டலை வரவைத்தது.
எப்படி தப்பித்து எங்கு செல்வது என தெரியவில்லை. ஆனால் தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இரவு நேரம் நெருங்க நெருங்க அந்த ஜன்னல் வழியே பார்த்து கொண்டே இருந்தாள். பகலை விட அங்கு இரவில் தான் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.