"சார் சார் நம்ம கூட்டிட்டு வந்த பொண்ணுங்கள்ள ஒரு பொண்ணு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருச்சு சார். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கு" ஒரு போலீஸ்காரர் வந்து சொல்ல, "என்ன சொல்றிங்க? ஏன்? எப்போ? எந்த பொண்ணு?" சுந்தரம் பதற்றத்துடன் கேட்க, "சார் பொண்ணு பேரு லட்சுமி. என்ன விஷயம்னு தெரியல. இப்போ ஆபத்து கட்டத்தை தாண்டிடுச்சு" சொல்லவும் ஹாஸ்பிடல் விவரங்களை வாங்கி கொண்டு கிளம்பினார் சுந்தரம்.
அதே பெண், சுவற்றை பார்த்து வெறித்த விழிகளுடன் படுத்திருந்தாள். கையில் கட்டு போட்டிருந்தது. அவள் அருகே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் சுந்தரம்.
"லட்சுமி" அவரின் கனிவான குரலில் மெல்ல திரும்பிய லக்ஷ்மியின் கண்கள் நிறைந்திருந்தது.
"அந்த நரகத்துல இருந்து உன்னை காப்பத்தி கொண்டு வந்தது இதுக்காகவா? ஏன் இபப்டி பண்ணுன?" - சுந்தரம் கேட்க, கண்களில் வழிந்த நீரை துடைக்க மனமில்லாமல் அவரை பார்த்தவள் உதடுகளில் வறண்ட புன்னகை.
"சார் நீங்க காப்பாத்தி கொண்டு வந்ததும் நானும் என் அம்மா தங்கைகள் கூட போயி நிம்மதியா வாழலாம். இந்த சில நாட்களை என் மனசுல இருந்தே அழிச்சிடலாம்னு தான் நெனைச்சேன். ஆனா, ஆனா...எங்க அம்மா...எங்க அம்மா..." சொல்லும் போதே குரல் உடைந்தது.
"என்னை செத்து போனு சொல்லிட்டாங்க.நான் அசிங்கமாம்...சாக்கடையாம்" கைகளால் முகத்தை மூடி கொண்டு அழுத லக்ஷ்மியை கண்டு சுந்தரத்தின் மனதில் இனம் புரியா வேதனை ஆட்கொண்டது.
"நான் யாருக்காக உயிரோட இருக்கணும். என்னை யாருக்கும் வேண்டாம். நான் செத்து போறேன்" தன் கைகளால் தலையில் அடித்து கொண்ட லக்ஷ்மியின் கையை பிடித்து தடுத்த சுந்தரத்தை கலங்கிய கண்களுடன் பார்த்த லக்ஷ்மியின் பார்வையில் அவர் மனம் ஒரு முடிவை எடுத்தது. அதில் உறுதியும் கொண்டது.
அவள் கண்களை துடைத்தவர், "லட்சுமி எனக்கு வயசு முப்பது. எனக்கு போலீஸ் வேலை தான் எல்லாமே. கல்யாணம் குடும்பம் எல்லாம் என் மனசுல வந்ததே இல்லை. உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பதிமூணு வருஷம் வித்தியாசம் இருக்கு. என் வேலைல எனக்கு நல்ல சம்பளம் வருது. சொந்தம்னு யாரும் இல்லை. உன் மேல பரிதாபமோ இல்லை தியாகி பட்டம் வாங்கணும்னோ எண்ணம் இல்லை. எனக்கு உன்னை பார்த்ததும் பிடிச்சுது. உனக்கும் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்." சுந்தரம் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தாள் லட்சுமி.