சாயந்திரமாக எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இனியாவிற்கு முழுவதுமாக நடந்த எல்லாவற்றையும் கூறி விட்டிருந்தான். ஆனால் இனியாவால் தான் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று எண்ணி எண்ணி மாய்ந்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் பவித்ராவும் சந்துருவும் விரும்புவதாக எல்லோரும் சொன்னது அவள் மனதை சமாதானப் படுத்தியது என்று தான் கூற வேண்டும்.
யாரையும் எதுவும் சொல்லாமல் தன் மேல் தான் எல்லாத் தவறும் என்று எண்ணி இனியா ஏதும் கூறவில்லை.
ராஜலக்ஷ்மி கூட அவரது மகன்களை திட்டித் தீர்த்து விட்டார். நீங்க செஞ்ச பிளான்க்கு கூட நான் ஏதும் சொல்ல மாட்டேன், ஆனா எங்க கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கலாம் இல்ல, நாங்க எல்லாம் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா என்று அதையே சொல்லி சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.
ஜோதி, பாலுவும் அங்கு அமர்ந்திருந்தனர். எல்லோரும் இனியாவைக் கூட விட்டு விட்டனர். பாலுவை தான் எல்லோரும் சேர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தனர்.
பாலு “ஐயோ சாமி தெரியாம பண்ணிட்டேன்” என்ற ரேன்ஜிற்கு புலம்பிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இருந்த கோபத்திற்கு ஸ்வேதா கையில் கிடைத்தால் வெட்டியே போட்டிருப்பான். அன்று தன்னிடமும் இனியாவிடமும் கெஞ்சியது என்ன, இன்று பணத்திற்காக பேசிய பேச்சென்ன, நல்ல வேலை இப்போதாவது தெரிந்ததே, அது வரைக்கும் நல்லது என்று எண்ணிக் கொண்டு, ‘சும்மாவே ஜோதி சாமியாடுவா, இப்ப சொல்லவா வேணும் என்ற எண்ணத்தில் அவள் எது சொன்னாலும் வாய் திறக்காமல் அப்பாவியாக ஒரு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.
இனியாவின் மௌனம் அங்கு எல்லோருக்குமே சிறிது கவலையை தான் கொடுத்தது. அதிலும் இளவரசனுக்கு கொஞ்சம் அதிகமாக.
“இனியா”
“ம்ம்ம்”
“உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை, உன் கிட்ட சொன்னா நீ அதை நம்பற நிலைமைல இல்லை, அந்த அளவுக்கு அந்த பொண்ணு உன்னை ப்ரைன் வாஷ் பண்ணி வச்சிருந்தா. அதனால தான் சொல்லலை”
“எனக்கு புரியுது இளா. நான் எவ்வளவு பூலா இருந்திருக்கேன்னு நினைச்சி தான் கஷ்டமாயிருக்கு. நான் சந்துருவோட லைப்பையே ஸ்பாயில் பண்ண பார்த்திருக்கேன் பாருங்க.”
ஜோதி இடையில் புகுந்து “இதுல உன்ன மட்டும் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை, இந்த சந்துரு ஒழுங்கா அவர் மனசுல இருக்கறதை சொல்லியிருந்தா ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாத்தையும் மனசுலையே வச்சிட்டு இந்த அளவுக்கு கொண்டு வந்தது அவர் தான். கடைசியில தான் அவருக்கு ஞானோதயம் வந்தது” என்றாள்.
திரும்ப திரும்ப நடந்ததை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் இளவரசனுக்கு தெரிந்த ஒருவரை வைத்து ஸ்வேதாவை பெண் கேட்பது போல் கேட்டார்கள். அதிலும் மாப்பிள்ளை நல்ல பணக்காரர், அப்படி இப்படி என்று ஏதேதோ சொல்லி ஆசைக் காண்பித்து வைத்திருந்தனர். அப்படி அந்த சம்மந்தத்திற்கு ஸ்வேதா ஒற்றுக் கொண்டு விட்டால் அவளின் முகத்திரையை கிழித்து விடலாம் என்று எண்ணி. ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் அசரவில்லை என்பது வேறு விஷயம்.
பின்பு இளவரசனின் குடும்ப நண்பர் ஒருவர் அவர் தெரிந்த ஒருவரின் காலேஜை விரிவுப் படுத்த தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடத்தில் கோடிக் கணக்கில் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்திருந்தார்.
இளவரசனின் நண்பரும் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் தான் செய்துக் கொண்டிருந்தார். பணம் வாங்கியவர் ஆள் அப்ஸ்கான்ட் ஆகி விட வாங்கி கொடுத்தவருக்கு பிரச்சனயாகி விட்டது. கிட்டத்தட்ட அவரின் சொத்துக்கள் முழுக்க இழக்க வேண்டிய சூழ்நிலை. அதை தீர்த்து வைக்க தான் இளவரசன் இரண்டு நாட்கள் அலைந்துக் கொண்டிருந்தான்.
இந்த விஷயம் மெதுவாக வெளியில் கசிய தொடங்கி விட்டது. விஷயம் ஒருவர் மாற்றி ஒருவருக்கு செல்ல செல்ல, இளவரசன் இந்த விசயத்திற்காக முழுதாக அலைந்துக் கொண்டிருந்ததால் இளவரசனுக்கு தான் பெரிய நஷ்டம் என்பது போல் வெளியில் பரவி விட்டது.
இளவரசனுக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. சரி, இதனால இப்ப என்ன அப்புறம் பார்த்துக்கலாம் என்று தான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால் இந்த விஷயம் பாலுவின் காதுகளுக்கே வந்து ஜோதி இளவரசனை தொடர்பு கொண்டு கேட்க, இளவரசனும் விஷயத்தை கூறினான். ஜோதியும் சமாதானமடைந்து வைத்து விட்டாள்.
ஆனால் பின்பு ஜோதி தான் யோசித்து இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி இளவரசனிடம் சொல்ல அவனும் இந்த விஷயத்தை ஸ்வேதாவின் அப்பாவிற்கு தெரியும் படி செய்தான். பின்பு ஸ்வேதாவிற்கும் தெரியும் விதமாக அவள் எதிரிலேயே ஒரு நாடகத்தை நடத்தினர்.
ஸ்வேதாவின் அப்பாவும் அவருக்கு தெரிந்த வட்டாரத்தில் விசாரிக்க எல்லோரும் அது தான் உண்மை என்ற ரேஞ்ஜில் சொல்லி விடவே, அடுத்த நாளே ஸ்வேதா மனதை மாற்றிக் கொண்டு ஏற்கனவே கேட்ட சம்மந்ததத்தையே ஒற்றுக் கொள்ளும் படி கூறி விட்டு இதை பாலுவிற்கும் இனியாவிற்கும் தெரியவும் வைத்தாள்.
ஒரு வழியா எல்லாம் நல்ல படியா நடந்துடுச்சி என்று எல்லோரும் சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் ராஜலக்ஷ்மிக்கு தான் மிகவும் சந்தோஷம். ஒரு பையனுக்கு அண்ணன் பொண்ணை கட்டியாச்சி, இன்னொரு பையனுக்கு தம்பி பொண்ணை கட்டி வச்சிடலாம், பிரிஞ்சி போன எல்லா உறவும் இது மூலமா தனக்கு கிடைச்சிடும் என்று எண்ணி எண்ணி சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழித்து எல்லோரும் பவித்ராவிடம் சந்துருவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்க அவளோ வாயே திறக்கவில்லை.
அவளுக்கும் நடந்த எல்லாம் மகிழ்ச்சியை தந்தாலும், ஏதோ அவள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது, அதனால் அவளால் இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முழு மனதாக சம்மதமும் சொல்ல இயலவில்லை.
யாருக்கு அவள் மனது புரிந்ததோ இல்லையோ சந்துருவிற்கு அவள் மனது நன்றாக புரிந்தது.
எல்லோரும் பவித்ராவின் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருக்க, சந்துரு இடை புகுந்து “இப்போத்தைக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்றான்.
எல்லோரும் அவனை கோபமாக பார்க்க, “இல்ல, இவ்வளவு பிரச்சனை நடந்ததுன்னு சொன்னா அது என்னால தான். எனக்கு இன்னும் ஒழுங்கா டெசிஷன் எடுக்கற அளவுக்கு அறிவு வரலைன்னு தானே இது காட்டுது. எனக்கு பவித்ராவை பிடிச்சிருக்கு தான். அதை நான் மறுக்கலை. பட் அது உண்மையான அன்பான்னு நானே என்னை டெஸ்ட் பண்ணிக்கணும். உடனே திரும்ப மேரேஜ் பத்தி எல்லாம் பேசாதீங்க. நான் திரும்பவும் ஊருக்கு போகலாம்ன்னு தான் இருக்கேன். எங்க ரெண்டு பேருக்குமே கொஞ்சம் டைம் வேணும்” என்று அவளுக்காகவும் பேசி முடித்து விட்டான்.
இனியாவிற்கும் இளவரசனுக்கும் அதுவே சரி என்று பட அவர்களும் விட்டு விட்டனர்.
ஜோதிக்கு தான் மனசே சரியில்லை. சந்துரு ஊருக்கு கிளம்புவதற்குள் திட்டி தீர்த்து விட்டாள்.
அவன் என்ன செய்வான் பாவம், அவனுக்கு இப்பவே மேரேஜ் ஓகே தான், ஆனா அதுக்கு பவித்ரா முழு மனசா சம்மதிக்கணும் இல்லையா. அதனால சந்துரு திரும்ப குஜராத் கிளம்பி விட்டான்.
எல்லோரும் ஓரளவுக்கு மனசை தேற்றிக் கொள்ள, பவித்ராவால் தான் அது முடியாமல் போனது.