இரண்டு நாட்கள் மயக்கத்திலேயே இருந்தாள்… அடுத்த நாள் கண் விழித்த போது, உன்னை விட்டு நான் செல்ல மாட்டேன் அண்ணா, நான் உன்னுடன் ஏதேனும் ஒரு ரூபத்தில், இருப்பேன், உன்னை நான் என்றும் பிரிய மாட்டேன்… எனினும், நான் இனி வாழ தகுதியில்லாதவள் அண்ணா, என்னை சாகடித்துவிடுங்கள்…. என்று கெஞ்சினாள்…
“இல்லம்மா… உனக்கு ஒண்ணுமில்லைடா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது உயிர் அவளை விட்டு சென்று விட்டது…
பெற்ற மகளின் கவலை கூட தெரியாத உங்களுக்கெல்லாம் எதற்கு பிள்ளைகள்… உங்களின் கவனக்குறைவால், என் தங்கை என்னை விட்டு சென்றுவிட்டாளே… இரண்டு வருடங்கள் அவள் மனதிற்குள்ளேயே எப்படி நொந்திருப்பாள்… என்னை அநாதை ஆக்கி இங்கு வந்தீர்கள்… இங்கு வந்தும் உங்களுக்கு பணம் தானே பெரிதாய் போய்விட்டது.. பெற்ற பிள்ளைகளின் நலத்தைவிட… உங்களின் கோடி ரூபாய் சொத்து என் தங்கையை என்னிடத்தில் கொடுக்குமா திரும்ப… எந்த அண்ணணும் வாழ்க்கையில் தன் பதினாறு வயது தங்கையை பார்த்திராத கோலத்தில் நான் அவளைப் பார்த்தேனே… தூக்கி வீசப்பட்ட மலராய் என் தங்கை இருந்தாளே… என் கையிலேயே இறந்தும் போனாளே… என்று அப்பாவிடம் சண்டை போட்டு வந்துவிட்டேன், இன்று வரை அவர் முகத்தில் விழிக்கவில்லை நான்…
குண்டூசி விழுந்தாள் கூட கேட்கும் நிலை அங்கே நிலவியது… அவள் சிலையாகி விட்டிருந்தாள்…
“அவள் இறந்து சரியாக ஒரு மாதத்தில் நீ என் வாழ்வில் வந்தாய்… அவள் சொன்னது பொய்யில்லை… என் ரிகா என்னை தேடி வந்து விட்டாள்… என்ன ஒன்று அவள் என்னை விட்டு உயிரில்லாமல் பிரிந்து சென்றாள்… நீ உயிரோடு பிரிந்து செல்வேன் என்கிறாய்… உன் விருப்பம்… நான் தடுக்கவில்லை… உன்னைப் பொருத்தவரை நான் யாரோ தானே?...” என்று அவளைப் பார்த்து கேட்டான்…
அடுத்த நிமிடம் அவள் “அண்ணா…” என்ற கதறலுடன், அவன் மடியில் தலை சாய்த்து கொண்டாள்…
“வேண்டாம்டா… அழாதே… “
அவன் என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை… அழுகை மட்டுமே வந்தது… ஓயாது அழுது முடித்தவள் ஒரு பெருமூச்சுடன், அவனிடத்தில், நடந்ததை கூறினாள்…
அதை கேட்டவனுக்குள் ஒரு பிரளயமே நிகழ்ந்தது… இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தியவன்,
“எனக்கென்று யாருமில்லைடா… நீயாச்சும் என்னுடன் இருப்பாயாடா?...” என்று பரிதவிப்புடன் கேட்டவனை,
“நீங்களே போக சொன்னாலும் நான் போக மாட்டேன் அண்ணா…” என்றதும் அவளை வாஞ்சையுடன் பாசம் மிக அணைத்துக்கொண்டான்…
“எனக்கு பசிக்கிறதுடா… சாப்பிடலாமா?... மூணு நாள் ஆச்சு நான் சாப்பிட்டு…” என்றபடி அவளைப் பார்த்தான்…
சட்டென்று எதுவும் யோசிக்காமல், அவனுக்காக தோசை செய்து எடுத்துவந்து அவனிடத்தில் கொடுத்தாள்…
“சாப்பிடுங்க அண்ணா…”
“நீ முதலில் சாப்பிடுடா…” என்றபடி அவளுக்கு கொடுத்தான் முதலில்….
மனம் நிறைய அதை வாங்கியவள் விரக்தியுடன் புன்னகைத்தாள்…
“நடந்ததை மறந்துவிடுடா… எல்லாம் சரி ஆகும்… நான் உன்னுடன் தான் இருக்கிறேன்… ஆமா.. உன் ஃப்ரெண்ட் யாரோ சொன்னியே…. ஷன்விகா… அவளுடன் கொஞ்ச நாள் தங்கி இருக்கிறாயாடா?... நான் அவளிடம் பேசவா?...”
“வேண்டாம் அண்ணா…. கொஞ்ச நாள் போகட்டும்…”
“சரிடா…” என்றவனுடன் சில நாட்கள் இருந்தாள்…
அவன் அவளிடத்தில், அவள் மயக்கத்தில் இருந்த போது உளறியவற்றை கூறினான்… “ராம், அபி குட்டிம்மா,” என்ற பெயரும் அவள் உச்சரித்தது என… அதை அப்போது கேட்டவளின் உடலிலும் அதிர்வு உண்டானது… அதை கவனித்தவன், உன் வாழ்க்கைக்கும் இந்த பெயருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதுடா… அதனால் தான் நான் அதை இப்போது சொல்லும்போது கூட உனக்கு அதிர்வு ஏற்படுகிறது… விரைவில், நீ குணமாவாய்டா…” என்று அவளைத் தேற்றினான்…
பிறகு ஷன்வியை தொடர்புகொண்டு ஊட்டியில் அவளை கொண்டு விட்டுவிட்டு, “அவளுடைய அப்பா-அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள்… அதனால் இப்படி இருக்கிறாள்… நீங்களும் சிறிது நாட்கள் எதுவும் கேட்க வேண்டாம்… அவளுடைய போக்கில் விட்டு விடுங்கள்… நான் மாதம் இருமுறை வந்து பார்க்கின்றேன்… அப்புறம், அவளை கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்… ப்ளீஸ்…” என்ற இறைஞ்சுதலுடன் விட்டு செல்ல மனமில்லாமல் விட்டுச் சென்றான் ஷன்வியிடத்தில்…
சொல்லியவன் சொல்லிவிட்டான் அனைத்தையும்… கேட்ட அனைவரும் தான் இன்னும் அதிலிருந்து மீளாமல் இருந்தனர்… கனத்த மௌனம் அங்கே நிலவியது… ஹரீஷ் தான் அதை கலைத்தான்…
“அவளுக்கு நடந்த விபத்தில், அவளது குருதி மட்டும் போகவில்லை… அவளது நினைவுகளும் தான்… தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், கல்லூரி மூன்றாம் ஆண்டிற்கு பின் நடந்த நிகழ்வுகள் எதுவும் அவளுக்கு நினைவில்லை… அந்த கால கட்டத்தில் பார்த்து பழகியவர்களின் முகங்களும் அவளுக்கு நினைவில்லை… அவள்…” என்று முடிக்கும் முன்…
வலுவிழந்த கால்களுடன் தட்டென்று அமர்ந்தான் ஆதி தரையில்… சத்தம் கேட்டு திரும்பியவர்கள் அவனிடம் ஓடினர்…
“ஆதி… என்னாச்சுடா… ஆதி… மச்சான்… ஆதி… இங்கே பாரு… ஆதி… இங்கே பாருடா… ஆதி… பேசு… அண்ணா இங்கே பாருங்க… ஆதர்ஷ்…” என்று அனைவராலும் அழைக்கப்பட்டவனின் கண்கள் குளமாகியது… இதயம் பலமாக அடித்துக்கொண்டது… கை கால்கள் தொய்ந்தது… மெல்ல முணுமுணுத்தது அந்த ஆதர்ஷ் ராமின் துடிக்கும் உதடுகள்…
“என் சீதை…” என்று….
“இந்த வாரமாவது உங்களின் கேள்விகளுக்கு விடை கிடைத்ததா கொஞ்சமேனும்?... ஓரளவேனும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்… ஆதியின் சீதை யார்?... என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமே இந்நேரம் உங்கள் அனைவருக்கும்… தெரியவில்லை என்றால் அடுத்த வாரம் சொல்கிறேன்… ஹ்ம்ம்… மீண்டும் அடுத்த வாரம் காதல் நதியில் சந்திப்போம்…”
தொடரும்
{kunena_discuss:739}