மறுநாள் பொழுது விடிந்ததின் அடையாளமாக சேவல் கூவியது… அதிகாலை சூரிய உதயத்தை வழக்கம் போல் பார்த்த சாகரிக்கு ஏனோ இன்றைய தினம் நன்றாக இருக்குமென்று தோன்றியது… ஆதர்ஷை தவிர வேறு நினைவுகள் இல்லை… அவன் கூடாரமிட்டு அமர்ந்திருந்தான் அவளின் மனதில்…
“சாகரி அப்பாவும் உன் மாமாவும் 5 மணிக்கே வயலுக்கு போயிட்டாங்க… நீ இந்த கம்மங்கஞ்சியை கொண்டு கொடுத்துட்டுவா இரண்டு பேருக்கும்…”
“சரிம்மா….”
“சீக்கிரம் வந்துடு,….”
“ஹ்ம்ம்….” என்றவள் வீட்டின் பின்புறம் இருந்த மல்லிகைச்செடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்…
அந்த நேரம் அவளைத் தேடி வந்த மயூரி,
“என்னடி?... இன்னும் வயக்காட்டுக்கு போகாம இருக்குற?... வா வா போகலாம்…” என்றபடி அவளை இழுத்துக்கொண்டு போனாள் மயூரி…
“ஹேய்… மயில்… எங்களுக்குத் தெரியாம அவளை எங்கே கூட்டிட்டு போற?...” என்றான் சித்து
“வயலுக்குப் போறோம்….”
“அப்போ நாங்களும் வருவோம்…” என்றாள் நந்து…
‘சரி வாங்க… பட் சேட்டைப் பண்ணக்கூடாது…. சரியா?...”
“ஹ்ம்ம்… சரி மயில்….” என்றனர் இருவரும்…
(சேட்டைப் பண்ண கூடாதா?... இரு இரு நாங்க வருவதே அதற்குத்தான்….) எண்றெண்ணிக்கொண்டனர் இருவரும் மனதிற்குள்…
“வாடி… போகலாம்…” என்ற மயூரி அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்… சாகரியும் ஒரு அடி எடுத்து வைத்த போது, பல்லியின் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவள், அங்கே வைக்கப்போரின் மேல் இருந்து பல்லி சத்தமிட்டுக்கொண்டிருந்தது…. அவளுக்கு வலது புறம் தூரத்தில் கருடன் கத்திக்கொண்டே சென்றது….
வீட்டை விட்டு வெளியே வந்தவள் தெருவோரம் இருந்த அடிபைப்பில் இருந்த நிறைகுடத்தை தான் முதலில் பார்த்தாள்… அதைத் தொடர்ந்து தெருவின் முனையில் இருந்த கோவிலில் இருந்து மணிச்சத்தமும் கேட்டாள்….
பின்னர் வழியில், பூ விற்கும் அக்கா அவளிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றதும், பசு மாடு ஒன்று அவளைக்கடந்து சென்றது….
அவளின் உள்ளுணர்வு எதையோ புரிய வைப்பது அவளுக்கு தெரிந்தது….
“சாகரி… இங்கே என்ன பண்ணுறாங்க எல்லாரும்….”
“உளுந்து பயிரிடுறாங்க சித்து…”
“அப்படின்னா?...”
“அப்படின்னா… உளுந்து செடி விதை போட்டு முளைக்க வைக்கிறாங்க….”
“ஓ… சரி சரி …”
“நல்ல ஊதக்காத்து வீசுதுல… சாகரி….” என்றாள் மயூரி
“ஹ்ம்ம்… ஆமா…”
“ஊதக்காத்தா?... அப்படின்னா… என்னது?... சாகரி?...”
“குளிர்ந்த காற்று வீசுதுன்னு அர்த்தம் நந்து….”
“ஓ… ஓகே ஒகே….”
“சாகரி இது ஆறு தானே?...”
“ஹ்ம்ம்… ஆமா சித்து….”
“இங்க மீனெல்லாம் இருக்குமா?....”
“இருக்கும் சித்து….”
“நாம அந்த தண்ணியில விளையாடலாமா?...”
“சரி… வாங்க…”
“தண்ணீ ரொம்ப சில்லுன்னு இருக்குமா?...”
“ஹேய்… என்ன இரண்டு பேரும் கேள்வியா கேட்குறீங்க?...”
“மயில்…. நாங்க ஒன்னும் உங்கிட்ட கேட்கலையே… சாகரிகிட்ட தானே கேட்டோம்….” என்றாள் நந்து….
“அத தான் ஏன் கேட்குறீங்க?... பேசாம வாங்க…”
“நாங்க கேட்குறது மட்டும் என்ன, சாகரியை பாட கூட சொல்லுவோம்… பார்க்குறியா?...” என்றான் சித்து…
‘அப்படியா…. ஹ்ம்ம்.. பாட சொல்லு… கேட்கலாம்…. எனக்கும் போர் அடிக்குது… இன்னும் வயலுக்குப் போக நேரம் ஆகும்…”
“போர் அடிக்குதா?... ஹ்ம்ம்… இனி அடிக்காது….” என்றபடி பேசிக்கொண்டே மயூரியை பிடித்து தண்ணீரில் தள்ளி விட்டனர் இருவரும்….
“ஏங்க… சந்தோஷமா இருந்தீங்களா?...”
“ஹ்ம்ம்… ஆமா கவி… இந்த இரண்டு நாள் போனதே தெரியலை…”
“ஹ்ம்ம்… உண்மைதாங்க….”
“கவி… என்ன ரெண்டு நாளும் என் பக்கத்துலேயே வரலை நீ?...”
“ஹ்ம்ம்… அத்தை மாமா எல்லாரும் இருக்காங்கல்ல, அதான்….”
“ஹ்ம்ம்… இப்போ மட்டும் பக்கத்துல இருக்குற?...”
“ஹ்ம்ம்… அது உங்களை எழுப்ப தான் வந்தேன்…”
“ஓ…. ஹ்ம்ம்…. சரி… இங்கே வா…”
“அதெல்லாம் முடியாது… நான் போகணும்….”
“கவி… வந்துட்டு போ…” என்றபடி அவளை நெருங்கியவனை தள்ளி விட்டு அவள் ஓடி விட்டாள்…
“ஹேய்… குட்டீஸ்… என்ன இப்படி பண்ணீட்டீங்க…” என்றபடி சாகரி மயிலை கரைக்கு வர சொன்னாள்…
“ஹைய்யா…. விழுந்துட்டா…. இப்போ உனக்கு போரே அடிக்காது மயில்….” என்று சிரித்தாள் நந்து…
அவளும் வந்து, “வானரங்களா, இப்படியா தள்ளி விடுவீங்க….” என்றாள் கோபமாக…
“இன்னைக்காச்சும் குளிக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் அப்படி செஞ்சோம் மயில்….” என்றனர் இருவரும் சிரிப்புடன்….
“இப்போ நானும் அதே நல்ல எண்ணத்துல உங்களை அடிக்கிறேன் பாருங்க…” என்றபடி அவள் அவர்களை துரத்த, சாகரி அவற்றைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் சிறிது நேரம்…
“சரி சரி… சிரிச்சது போதும்…. நீ பாடு….” என்றான் சித்து…
“இப்போவா…?...”
“ஆமா… இப்போவே தான்….” என்றாள் நந்துவும்…
“ஆமா சாகரி… சும்மா பாடிட்டே ஆடு… இந்த படத்துல ஹீரோயின் எல்லாம் இந்த மாதிரி கிராமத்துல இப்படி வயலுக்குப் போகும்போது பாடி ஆடிக்கிட்டே போவாங்கல்ல… அப்படி நீயும் பண்ணு… நாங்களும் ஆடுறோம்…. என் ட்ரெஸும் காயணும்ல…. ஆடிக்கிட்டே வந்தா காத்துக்கு சீக்கிரம் உலர்ந்துடும்… அதாண்டி… ப்ளீஸ்…” என்றாள் மயூரி…
“வாவ்… சாகரி… மயில்… ஆடப்போறீங்களா?... சூப்பர்… ஆடுங்க ஆடுங்க… அன்னைக்கு மாதிரி….” என்றான் சித்து..
“ஹேய்… அப்படியெல்லாம் ஆட முடியாதுடா… இது சும்மா கையில ஒரு பூவோ, குச்சியோ, கொப்போ வச்சிகிட்டு ஆடினா தான் நல்லாயிருக்கும்….”
“எப்படியாவது ஆடுங்க… பட் ஆடினா ஓகே தான்….” என்றான் சித்து புன்னகையுடன்….
“ஆமா.. சாகரி… ப்ளீஸ்… ஆடேன்….” என்று நந்துவும் கெஞ்ச… அவளும் சம்மதித்தாள்…