“ஐயோ, அப்படியெனில் உங்களிடம் ஒன்றும் இல்லையா..? என்ன செய்யப் போகிறீர்கள்?. தனவர்சினி இதற்கு ஒப்புக் கொள்வாளா என்ன?”
“அடக்கடவுளே… நான் ஒரு பெண்ணை நம்பி ஏமாந்துவிட்டேன் போல தெரிகிறதே…! அவள் மனம் கவர்ந்தவனுடன் மரத்தடியில் அமர்ந்து கஞ்சி குடிப்பதையே விரும்புவதாக கூறினாள்”
“முதலில் அவளுக்கு கஞ்சி வைக்கத் தெரியுமா என்று நீ கேட்டிருக்க வேண்டும்?” பின்னிருந்து தந்தையின் குரல் கேட்டு திரும்பினான்.
“இல்லை சத்யன், ஒரு முறை கஞ்சி குடித்து பார்த்துவிட்டால் செய்துவிடுவேன்” மதுமதி தைரியம் கூறினாள்.
“நான் செத்துவிடுவேன். நீ இதுவரை கஞ்சி காய்ச்சியதும் இல்லை. குடித்ததும் இல்லை வசனம் மட்டும் பேசி இருக்கிறாய். இறைவா, இந்த இக்கட்டிலிருந்து என்னை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்?”
“முந்தைய யோசனைப்படி இலைதழையை தந்து காப்பாற்றுவார் அண்ணா..” நித்யன் ஆறுதல் கூறினான்.
“நான் சொன்னதுபோல் என் மகன் வனமலையை காப்பாற்றிவிட்டான் பார்த்தீர்களா? அவனுக்குத்தான் எத்தனை இழப்புகள்?”
“நீ ஒன்றும் புலம்ப வேண்டாம். கிரானைட் குவாரியை தடை செய்த உடனேயே நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டான். இந்த மரத்தடி கதையெல்லாம் கதாநாயகியை கைக்குள் போட்டுக் கொள்ளவென்று கூறிய மிரட்டல்தான்” விஸ்வநாதன் விளக்கினார்.
“அப்படியா.?”
“பொய். தற்சமயம் ஒரு ஆரஞ்சு நிற லெஹங்கா வாங்குவதற்கு கொஞ்சம் பணம் மட்டும் வைத்திருக்கிறேன்….“ என்று இழுத்தான்.
“தனவர்சினி…. “
“இனியொரு முறை அவள் பெயரை கூறினால், ஆங்கிலேயர் காலத்து அடக்கு முறை ஏவப்படும், ஜாக்கிரதை.”. சத்யன் மிரட்ட,
“அதென்ன ஆங்கிலேயர் கால அடக்கு முறை?”
“இப்போதே நான் உங்களுக்கு புரிய வைக்கிறேன். என் பிள்ளையை துரோக ரத்தம்… வாழ்வுடன் விளையாடும் புத்தி… என்று பழித்தீர்கள் அல்லவா. வாருங்கள்”
“சீதாம்மா, அப்படியெனில் கடைசிவரை என்னை நம்பாத உங்கள் மருமகளை என்ன செய்வதாம்?.”
“உனக்கு மனைவியாக இருப்பதே பெரிய தண்டனைதான்…” இதைதான், சேம்சைட் கோல் என்பார்களோ?
“பிறகு, எவ்வளவு பெரிய ரகசியத்தை அவளிடம் மறைத்துள்ளாய். அவளை விபத்தின்போது மணிக்கணக்கில் உண்ணாமல் உறங்காமல் கூட இருந்து காத்தவன் நீதானே. அதற்கு அவளிடம் நீ வைத்திருந்த அன்புதானே காரணம்” சீதா கூற, சாரதாவிடம் பேசி தெளிவு பெற்றிருந்த விசயத்தை போட்டு உடைத்தார்.
“அதை சொல்வது ஒருவித கட்டாயத்தை உருவாக்கிவிடுமல்லவா? எனக்கே முதலில் அது புரியாதபோது நான் எப்படி சொல்வேன்” என்றவன் தொடர்ந்து,
“சீத்தாம்மா, அப்போது எனக்கு ஒரே ஒரு எண்ணம்தான் இருந்தது. அவளை எப்படியாவது பிழைக்க வேண்டும் என்றே எண்ணினேன். ஏனெனில், அவள் என் போலவே தன் குடும்பநலனை நினைத்தாள்.“ என்றவன் தொடர்ந்து, அன்று நடந்த அனைத்தையும் கூறினான்.
“அப்படியெனில் நீ அலியாவுடன் இத்தாலி சென்றாய் என்ற விசயம் பொய்யா?. ஏன் சத்யன், இப்படி உன் பெயரை நீயே கெடுத்துக் கொண்டாய். ஒரு பிரச்சினை என்று வரும்போது உன்னை பற்றிய ஒரு உறுதியான முடிவிற்கு நான் வரமுடியாமல் போனது இவ்வாறான விசயங்களினால்தானே. இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறாய்?” விஸ்வனாதன் கோபமாக கேட்டார்.
“அது…. இப்ப எதற்கு அதைப்பற்றி… எல்லாம் சரியாக முடிந்துவிட்டதுதானே.” சத்யன் முணுமுணுத்தான்.
இத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த ராதை, மதுவை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து “உண்மையாடி செல்லம். அம்மாவுக்காக பொய் சொல்ல சொன்னாயா? என் வளர்ப்பு வீண் போகவில்லையடி தங்கம்” என்று கண்ணை துடைத்துக் கொண்டார்.
“எல்லாமும் முடியவில்லை. இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.” விக்ரம் குரல் கொடுத்தான்.
“வனமலை காக்கப்பட்டுவிட்டது. வெற்றியை கொண்டாட வேண்டாமா?..”
“என்ன செய்ய வேண்டும் நீயே சொல்லப்பா?”
“மாமா, முதலில் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சி பிறகு பார்ட்டி டைம். ரெமி எல்லாம் வந்துவிட்டதா?” என்று விக்ரம் வினவ, அவள் ஒப்புதல் சைகை தர,
“இப்போது யாருக்கு நன்றி சொல்லப் போகிறீர்கள்?” என்று சத்யன்,
“மதுமதிக்குதான், எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்த்து போராடி…. பிரச்சினையை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி… முன்னின்று வழி நடத்தி.. உண்மையிலேயே முழு கிரெடிட்டும் அவளுக்குத்தான். டபுள் சியர்ஸ் டு மதும்மா” விக்ரம் முடித்தான்.