கலைமதி சென்னையில் உள்ள ஒரு பெரிய எம். என். சி கம்பெனியில் செலெக்ட் ஆகி இருந்தாள். கலைக்கும் காவ்யாவுக்கும் பரிட்சை மட்டும் இருக்கும் போது சூர்யா டிரெயினிங் முடிந்து இங்கு வந்து விட்டான். ஆனால் பதவி உயர்வோடு சென்னையில் அவனுக்கு போஸ்டிங் போட்டிருந்தார்கள்.
எப்படியும் மதியும் சென்னையில் தான் வேலை பார்க்க வேண்டும் என்பதால் மங்களமும், சிவ சுப்ரமணியனும் அவனை சென்னையில் வீடு பார்க்க சொல்லி விட்டார்கள். தீவிரமாக வீடு தேடுவதில் கவனம் செலுத்தினான் சூர்யா.
"நீங்களும் எங்க கூட வந்துரனும்", என்றாள் கலைமதி.
"இல்லை மா, நானும் உன் அத்தையும் ஊருக்கு போறோம். எங்களுக்கு அங்க இருக்க தான் பிடிச்சிருக்கு. சூர்யாவுக்காக தான் திருநெல்வேலிக்கே வந்தோம்", என்றார் சிவ சுப்ரமணியம்.
"நீ சீக்கிரம் ஒரு பேர பிள்ளையை பெத்து கொடு. அவனை பாத்துக்க நானும் மாமாவும் சென்னைக்கே வந்துறோம். அது வரைக்கும் நீயே உன் புருசனை பாத்துக்கோ", என்று சொல்லி விட்டாள் மங்களம்.
சென்னையில் வீடு பார்த்து அங்கே அனைத்து பொருள்களையும் வாங்கி போட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தான் சூர்யா. மதி பரிட்சை முடிந்து அங்கு செல்வதாய் இருந்தது.
கடைசி நாள் ப்ராஜெக்ட் வைவா. அன்றொடு காலேஜ் முடிந்தது.
"என்ன மா காலேஜ் கிளம்பிட்டியா?", என்று கேட்டாள் மங்களம்.
"கிளம்பிட்டேன் அத்தை. போகலாமா மாமா? அப்புறம் மதியம் எப்ப காலேஜ் முடியும்னு தெரியலை மாமா. அதனால கூப்பிட நீங்க வர வேண்டாம். நானே பஸ்ல வந்துருவேன்", என்றாள் கலைமதி.
"சரி மா, மங்களம் மதியை விட்டுட்டு வறேன். ஏதாவது வாங்கிட்டு வரணுமா?", என்று கேட்டார் சிவ சுப்பிரமணியம்.
"அதெல்லாம் வேண்டாம் பா. மதிக்கு நைட்டுக்கு பஸ் டிக்கட் மட்டும் புக் பண்ணிட்டு வாங்க", என்றாள் மங்களம்.
இன்று நைட் கிளம்பி காலையில் அவனை பார்த்து விடலாம் என்று நினைத்து மதி முகம் மலர்ந்தது. அந்த சந்தோசத்துடனே சிவ சுப்ரமணியத்துடன் கிளம்பினாள்.
அதே நேரம் ஷியாம் எப்போது வருவான் என்று எதிர்பார்ப்போடு இருந்தாள் காவ்யா.
"பெரிய இவனாட்டம் காலேஜ் முடிஞ்ச அடுத்த நாள் உன்னை தேடி வந்துருவேன்னு சொன்னான். ஆனா இன்னைக்கு பரிட்சை முடியுது. நாளைக்கு எப்படி வருவானாம். சரியான பிராடு", என்று நினைத்து கொண்டு கடுப்புடன் காலேஜ் கிளம்பினாள்.
ஆனால் பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து போகும் வழியில் ஒரு காரில் இருந்து இறங்கிய தன்னவனை பார்த்து விழி விரித்தாள். கண்களில் நீரொடு "ஷியாம்", என்று அழைத்து கொண்டே அவனருகே ஓடினாள்.
"ப்ளீஸ் டி சீக்கிரம் காரில் ஏறு", என்று அவசர படுத்திய ஷியாம் அவள் கையை பற்றி முன் சீட்டில் அமர வைத்து கதவை அடைத்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.
இது கனவா நினைவா என்று தெரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா. சிறிது தூரம் சென்றதும் ஆள் இல்லாத ரோட்டில் காரை நிறுத்தியவன் வன்மையாக அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
எலும்புகளே நொறுங்கி விடும் போல இருந்தது அவன் அணைப்பு. அவளுக்கும் அந்த நெருக்கம் தேவையானதாக இருந்தது.
எல்லையில்லா நிம்மதியுடன் அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். கட்டி பிடித்து கொண்டிருந்தவர்களின் உதடுகளும் மற்றவரின் முகத்தில் ஊர்வலம் போனது.
நிதானத்துக்கு வந்த பின்னர் தான் காரை எடுத்தான் ஷியாம்.
"எப்ப வந்தீங்க ?", என்று கேட்டாள் காவ்யா.
"நேத்து நைட்ல டி. இன்னைக்கு எக்ஸாம் முடியுதுன்னு தெரிஞ்சும் அங்க இருக்க முடியுமா? அப்புறம் நான் இன்னைக்கு வந்தது அத்தை, மாமாக்கு தெரிய வேண்டாம் சரியா? நாளைக்கு அப்பா, மாமா கிட்ட நிச்சயம் பத்தி பேசுவாங்க"
"ஹ்ம் சரி. எனக்கு சந்தோசமா இருக்கு தெரியுமா உங்களை பாத்தது?"
"எனக்கும் தான். அதுவும் கடைசி நாள் மாமா ன்னு கூப்பிட்டியா? அந்த சத்தம் கேட்டுட்டெ இருந்தது என் காதுல. அடிக்கடி அப்படி கூப்பிடு கவி. கிக்கா இருக்கு"
"ஹ்ம்ம் எனக்கும் உங்க ஞாபகம் தான். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம், மதி இன்னைக்கு அண்ணாவை பாக்க சென்னை கிளம்புறா"