(Reading time: 78 - 156 minutes)

திருமணத்திற்கு முந்தின நாள் இரவு, நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற, ஜனனியும், சரயூவும் காலில் சக்கரம் இல்லாத குறையாக சுழன்றனர்…

பாடல் சத்தமும், வந்திருப்பவர்களின் பேச்சு சத்தமும், திருமண வீட்டிற்கே உண்டான களையை கொடுக்க,

மேடையில் அமரவைக்கப்பட்டிருந்தான் அர்னவ்….

அவனது பக்கத்தில் நின்று கொண்டே அவனை கேலி செய்து கொண்டிருந்தாள் ஜனனி…

பூஜாவும், பிரேமியும், அவனருகில் பொம்மை போல அழகாய் நிற்க, அவனும் அவர்களுடன் கதையளந்து கொண்டிருந்தான் ஏதேதோ…

பின்னர், சரயூ சென்று ஜானவியை அழைத்துவர, ஜனனி அர்னவின் காதில் கிசுகிசுத்தாள்…

“தம்பி அங்க பாரு…”

அவன் திரும்பி பார்க்க, அங்கே இள மஞ்சள் நிற பட்டு புடவையில் அழகாய் வந்து கொண்டிருந்தாள் ஜானவி…

அந்த புடவை அவளுக்கு பாந்தமாய் பொருந்தி இருக்க, அவனால் அவளை விட்டு கண்களை அகற்றவே முடியவே இல்லை…

அருகில் வந்து அமரும் வரைக்கும் அவளை விட்டு விழிகளை அகற்றாதவன்,

‘டேய்… போதும்டா… பாவம்… அவ… நீ இப்படி பார்த்தா, அப்புறம் அவ நிலைமை அதோ கதி தான்…”

சரயூ கேலி பாதி, மிரட்டல் பாதியுமாய் கூற, அவன் தன் விழிகளை அவளிடமிருந்து பிரித்தெடுக்க சிரமப்பட்டான் மிக…

சிரித்த வண்ணம் திரும்பிய அர்னவ், பிரேமி முகம் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதை பார்த்து, அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்தான்…

“என்னாச்சு என் பிரேமி குட்டிக்கு?... முகம் வாடிப்போய் இருக்கு?...”

“போ மாமா எங்கிட்ட பேசாத….”

“ஏண்டா என்னாச்சு?...”

“நீ என்னை தான கட்டிப்பேன்னு சொன்ன… இப்போ ஜானு அத்தையை கட்டிக்கப்போற?.. அதான் கோபம் உன் மேல…”

அவள் அப்படி சொன்னதும், அர்னவ் ஜானவியைப் பார்க்க, அவளோ தன் கைகளை பிசைந்து கொண்டிருப்பது புரிந்தது…

“நீ வளர்ந்து பெரிசானதும் மாமா உன்னை கட்டிப்பேனாம்… சரியா?...”

அவன் அவள் தாடை பிடித்து கொஞ்சி சொல்ல,

“நிஜமாவா மாமா?... என்னை கட்டிப்பியா?...”

“ம்ம்… உன்னை மட்டும் தான் கட்டிப்பேன்….” என்றவன் ஜானவியைப் பார்த்துக்கொண்டே பிரேமியை லேசாய் அணைத்துக்கொள்ள,

“நீ இப்போ தான் குட் மாமா…” என்றாள் பிரேமி அர்னவிற்கு ஒரு முத்தமும் கொடுத்தபடி…

“ஹ்ம்ம்… எனக்கு மட்டும் தான் முத்தமா?... அத்தைக்கு கொடுக்கலையா?...”

“அத்தைக்கு இல்லாமலா?... என்னை இறக்கி விடு… நான் அத்தைக்கு கொடுக்குறேன்….”

“ஹ்ம்ம்… இறங்க எல்லாம் வேண்டாம்… அத்தை உன் பக்கத்துல வருவா… அப்போ கொடு சரியா?... ஒன்னு உன் சார்பா… இன்னொன்னு……”

அவன் இழுக்க, ஜானவியின் முகமோ சிவந்து போயிற்று…

சந்தனம் பூசியிருந்த கன்னத்தில் அவளின் வெட்கச்சிவப்பு தனியாக தெரிய, அதில் தொலைந்தே போனான் அர்னவ்…

“அத்தை பக்கத்துல வாங்க… நான் உங்களுக்கு கிஸ் தரேன்…”

பிரேமி தன் முத்துப்பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டே கூற,

பிரேமியை பார்ப்பதற்காக நிமிர்ந்தவள், அவனை பார்க்கவில்லை…

‘பிரேமி… அத்தைக்கு முத்தம் கொடு….” என்றவன், தன் மடியிலிருந்தவளோடு லேசாய் ஜானவியின் பக்கம் சரிய, அவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது…

‘கார்த்தி…ப்ளீஸ்…” அவள் முணுமுணுத்த்து அவனுக்கு தெளிவாகவே கேட்டது…

புன்னகையுடன், “அப்போ என்னை நிமிர்ந்து பாரு…” என்றான் அவனும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.