36. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
அந்த பிரபலமான பிரமாண்ட பட்டுச் சேலைக் கடைக்கு அவர்கள் வந்திருந்தனர்.திருமணத்திற்கான மற்ற ஷாப்பிங்க் வேலைகள் முடிந்து அனிக்காவிற்கான திருமணச் சேலை வாங்குவது மட்டுமே மீதமிருக்க, ரூபன் பிடிவாதமாக அவளது சேலை அவனுடைய தேர்வாகத்தான் இருக்க வேண்டுமென்று கூறிவிட வீட்டினர் அந்த ஷாப்பிங்கை மட்டும் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர்.
ரூபனின் ஃபேக்டரி மற்றும் ஆஃபீஸ் அலுவல் நேரம் வித்தியாசம் உண்டு, காலை எட்டு மணி அளவில் ஃபேக்டரி செல்லும் ரூபனும், ஜீவனும் கடை திறக்கும் நேரத்தில் ஃபேக்டரியிலிருந்து சேலைக் கடைக்கு வருவதாக முடிவெடுத்திருக்க, அனிக்காவை தனியாக எப்படி அனுப்ப என்று யோசித்த அத்தையிடம் அவளை திவ்யா வந்து அழைத்து வருவாள் எனச் சொல்ல அவரும் சம்மதித்தார்.
திவ்யா நீ இன்னிக்கு ஆஃபீஸ் வர டைம்க்கு அனியை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு கடைக்கு வா என்று ஜீவன் சொல்லியிருக்க, பெண்கள் இருவரும் நேரமே கடைக்கு வந்துச் சேர்ந்திருந்தனர்.
கடையினுள்ளே நின்றிருந்தவளை உள்ளே நுழையும் முன்னே இருந்து பார்த்து விட்ட ரூபன் அக்கம் பக்கம் யாரையும் பாராமல் அவளை மட்டும் இமைக்காமல் பார்த்து முன்னேற, அண்ணன் நிலைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டான் ஜீவன். முதலில் உள்ளே வந்த ரூபனை
ஹாய் அண்ணா என்று திவ்யா விஷ் செய்ய , அவளைப் பார்த்து ஒரு செகண்ட் செலவழித்து ஹாய் சொன்னவன் லஜ்ஜையே இல்லாமல் மறுபடியும் அனியைப் பார்த்து ஜொள்ளினான். திவ்யா பின்னே வந்த ஜீவனுக்கும் ஒரு ஹாய் சொல்லி வைத்தாள். முகத்தில் எவ்வித பாவனையுமில்லாமல் சாதாரணமாக பேசும் அவளை ஜீவன் கவனத்தில் கொண்டான்.
எவ்வித ஒப்பனையும் இல்லாமலே இந்த ஆண்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்? என்ற மகா முக்கியமான கேள்வி ரூபனை பார்த்த நொடியிலிருந்து அனிக்கா மனதில் ஓட எப்போதும் அவளை வசீகரிக்கும் அவள் அத்தானை அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை இன்னும் அவளுக்கு ஆண்களுக்கான பார்லர் குறித்த விபரம் தெரியாதோ? என்னவோ?
ரூபன் வழக்கம் போல அலுவலகத்துக்கு செல்லும் விதமாகத்தான் உடை அணிந்து இருந்தான். புறப்பட்டு வரும் முன் ஃபேக்டரி மெஷினில் எழுந்த ஒரு சின்ன பிரச்சினையை அங்கிருந்த பணியாளரோடு இணைந்து சரி பார்க்கையில் மடக்கி விட்டிருந்த சட்டையின் கைப்பகுதியை இன்னும் சீராக்கி இருக்கவில்லை.
அனிக்கா இனிமே எப்பவுமே வெளியே போகும் போது கொஞ்சமாவது நகைப் போட்டுக்கணும், என்று அண்ணி கண்டிப்பாக சொல்லியிருக்க, அவள் ரூபன் வாங்கித் தந்தவைகளையே அன்று அணிந்து இருந்தாள். ரூபனுக்கு சிறகில்லாமல் வானில் பறக்க இந்த ஒரு காரணம் போதாதா என்ன?, அதுவுமல்லாமல் பல வண்ணங்களோடிய சேலையில் கண்களைப் பறிக்கும் விதமாக நின்றிருந்தாள் அவள். அவன் சும்மாவே அப்படி, பின்னே இப்ப எப்படி ?... சேலையில எப்ப பார்த்தாலும் ரொம்ப அழகா இருக்கிறா……….மேரேஜிக்கு அப்புறம் தினம் ஸாரிதான் கட்டச் சொல்லணும்…அவன் மனதிற்க்குள்ளாக ரகசிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் இருவரையுமே வாயில் ஈ புகுவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா எனும் அப்பாவி பிள்ளையை ஜீவன், வா அவங்க ஸாரி சாய்ஸ் பண்ண போகட்டும் நாம அதுவரைக்கும் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வருவோம் என அழைக்க தான் எதற்காக அனியோடு வந்தோம் என்பதையே மறந்தவளாக ஜீவன் சொல்வது சரிதானே……. திருமணம் செய்துக் கொள்ளப் போகின்ற இருவர் நடுவில் இடைஞ்சலாக நாம் எதற்கு? ……… என்றெண்ணியவளாக அவனோடு புறப்பட்டாள். தன்னுடைய பிளான்படியே அவளை தனியே பேச அழைத்துச் செல்ல வாய்ப்புக் கிடைத்ததென்று வாய்க்குள்ளாகவே சிரித்தவனாக காரை வேகமாக எடுத்தான் ஜீவன்.
இங்கு ரூபன் தன் சட்டைக் கைப்பகுதி மடிப்பை சட்டென்று கவனித்து எடுத்துவிட முயல, “ இருக்கட்டுமே அத்தான்” என்றவளாக அவன் செய்கையை தடுத்து அவன் கையைப் பற்றிக் கொள்ள, அவர்கள் இருவரும் திருமணப் பட்டுக்கள் இருக்கும் பகுதிக்கு சென்றனர்.
சேலைத் தேர்வு செய்த நேரம் முதலாக அவள் தனக்கு பிடித்த டிசைன்களை ஒவ்வொன்றாக தெரிவுச் செய்து காண்பிக்க இவன் அந்த ஒவ்வொரு முறையும் இந்த டிசைனில் மெரூன் கலர் இருக்கா? எனக் கேட்டு கடை ஊழியரை திணறடித்தான். இவனுக்கு மெரூன் கலர்தான் இஷ்டமோ என்று எண்ணியவளாக தேர்வு செய்வதை நிறுத்தி அவனையே பார்த்து வைக்க, அவனைச் சுற்றி ஏராளமான மெரூன் கலர் சாரிகள் குவிந்து இருந்தன. அதிலிருந்து சட்டென்று சேலை ஒன்றை எடுத்தவன், அதை கையில் ஏந்தியவனாய் அவளுக்கு பொருந்துமா என பார்க்க எண்ணி விழிதிருப்ப அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் அவளிடம் என்ன? என்று கேட்டு வைத்தான்.
சுற்றி இருக்கும் சேலைகளைக் காட்டி சைகையில் அவள் என்ன? என்று கேட்க அசடு வழிந்தான்.
“உனக்கு இந்த கலர் ரொம்ப அழகாயிருக்கும் அனி” என்றான்…..அவளுக்கு அவன் தீபன் திருமணத்தில் தன்னைப் பார்த்த உருவில் பார்க்க எண்ணுகிறான் என்பது இன்னும் நினைவிற்கு வரவில்லை.