அனிக்காவை அலங்கரித்து ஆலயத்திற்க்கு அழைத்து வர ரூபன் வீட்டுப் பெரியவர்கள் பெண்கள், சிறியவர்கள் அனைவரும் சென்று விட , ஜாக்குலின் அக்காவின் கணவர் மற்றும் தீபன், ஜீவனோடு மற்றும் சில உறவினர்களோடு அவன் புறப்பட்டு திருமண ஹால் செல்ல அங்கு அவனை எதிர் கொண்டழைத்து மரியாதை செய்ய காத்திருந்தான் கிறிஸ்.
கடந்த சில நாட்களில் தன் தங்கையை உயிராய் பாவிக்கும் ரூபனை வெகுவாய் கண்டுக் கொண்டிருந்தான் கிறிஸ். தான் தேடிய தங்கைக்கேற்ற அழகான இணையாக இவனிருக்க நாம் இவனை கருத்தில் கொள்ளாதிருந்ததும், தாழ்மையாக நினைத்ததும் எப்படி? என்று எழும் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. அப்பா எதிர்பார்த்த அளவு அவன் செல்வம் கொண்டவனில்லைதான். ஆனால், அமைதியாக உலகம் தெரியாதவன் போல காட்சியளிக்கும் இந்த ரூபனின் தொழில் செய்யும் திறமையை கிட்டே இருந்து பார்த்தால் அல்லவா புரிகிறது.
ஏற்கெனவே நான்கு கால் பாய்ச்சலில் சில வருடங்களில் அவன் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி, இன்னும் வருடங்களாக வளருவானே அன்றி தேய்பிறை காண வாய்ப்பில்லை. இவனுக்கே தன்னை அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுமோ என்று தோன்ற வைத்திருந்தான் ரூபன்.
எல்லாவற்றையும் விட அவனுக்கு தேவையானது ஒன்றே. அவன் தங்கையின் மகிழ்ச்சி. அவள் தன் வீட்டில் மகளாய், தங்கையாய் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, அவனது மனைவியான பின்னரும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கப் போகிறாள் என்னும் எண்ணம் அவனளவில் உறுதிப் பட்டிருந்தது.
அன்றொரு நாள் ஒரு மோசமான சூழலில் கன்னம் கன்னமாய் அவனுடைய அறைகளனைத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை தன்னை எதிர்த்துப் பேசாத ரூபன், நிச்சயத்திற்கு முன்பான அத்தனை சந்திப்புக்களிலும் இவன் கொடுத்த அத்தனை குடைச்சலையும் பொறுமையாக ஏற்றுக் கொண்ட ரூபன், நினைக்க நினைக்க அவன் பொறுமையான குணம் ஆச்சரியம் தான் கிறிஸ்ஸூக்கு
தங்கையின் திருமண நாள் நெருங்க நெருங்க என்னதான் இருந்தாலும் தன் தங்கையின் கணவன் ஆகப் போகிறவன், தான் கொடுத்த குடைச்சல்களால் எழுந்த கோபத்தை பின்னொரு நாள் தன் தங்கையிடம் காட்டி விடக் கூடாது என்றெண்ணியவனாக அவனிடம் தன்னுடைய ஈகோவை விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்க போக ரூபன் பதறிவிட்டான்.
என்ன அத்தான் நீங்க, நீங்களும் அண்ணனும் எனக்கு ஒண்ணுதான். நான் தப்பு பண்ணா என்னை கண்டிக்க உங்களுக்கு உரிமை இருக்கு. நான் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கலை. சொல்லப் போனா அன்னிக்கு நீங்க என்னை அடிச்சதுக்கு அப்புறம் நமக்கு இந்த தண்டனை தேவைதான்னு மனசுக்கு திருப்தியாச்சு என்றவன்….. நிதானித்தவனாக
நீங்க கவலையே படவேண்டாம் அத்தான் , நான் அவளை நல்லா பார்த்துப்பேன். அன்னிக்கு ஏற்கெனவே ரொம்ப குழப்பம் ஓடிட்டு இருந்தது. அதில அனியும் அப்படிச் சொன்னதும் முட்டாள்தனமா கையோங்கிட்டேன். இன்னும் கூட எனக்கு நான் அப்படி நடந்துக் கிட்டது குற்ற உணர்ச்சியா இருக்கு. இனி ஒரு நாளும் அப்படி தப்பைச் செய்ய மாட்டேன் என்று கிறிஸ்ஸின் மனதில் இருந்த கேட்காத கேள்விக்கும் அவன் பதில் சொல்லினான்.
அதே நிறைவு உணர்வோடு மேளதாளத்தோடு நீல நிற சூட்டில் அமர்க்களமாய் வந்துக் கொண்டிருந்த ரூபனையும், உறவினர்களையும் எதிர்கொண்டுச் சென்று வரவேற்றான் கிறிஸ். மகிழ்ச்சியில் ரூபனை அணைத்துக் கொள்ளவும் மறக்கவில்லை…….என்னவிருந்தாலும் அவனது செல்லத் தங்கையின் கணவனாயிற்றே.
அனிக்கா அழகான அந்த தேன் நிற பட்டுச் சேலையில், மிக அழகான தலையலங்காரத்தில், தலையில் க்ரீடம் அணிந்து, அதை ஒட்டி தலை மறைத்து,இடை தாண்டி அழகான வெய்ல்-ல்(Veil) (வெள்ளை நிற நெட் துணியாலான பெண்கள் அணியும் தலை முக்காடு) பரவி நிற்க தேவதையாய் கண்ணைப் பறித்தாள்.
ரூபனுக்கான அனைத்து வரவேற்பையும் முடித்து, தங்கை வீட்டை விட்டு மணமகளாய் விடைபெறும் போது அவளைப் பார்க்கவென அப்போது அவசரமாய் வீட்டிற்க்கு திரும்ப வந்திருந்தான் கிறிஸ்
அனிக்கா திருமணத்திற்கு ஆயத்தமாகி நின்ற அந்த நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் மிகவே உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி என ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள் அனிக்கா.திருமண உடையோடு தன்னருகில் வந்தவளை தாமஸ் அணைத்துக் கொண்டார், எப்போதும் தன்னைச் சுற்றி சுற்றி வரும் மகள் திருமணமாகி மற்றோர் வீட்டிற்கு செல்லப் போகிறாள் என்னும் பிரிவுத்துயரம் வெகுவாய் அழுத்த ஆண்கள் அழக் கூடாதெனும் பழைய மானுட கொள்கை ஒன்றுதான் அன்று அவரை அழ விடாமல் காத்துக் கொண்டது எனலாம்.
தன்னுடைய எண்ணம் போல் இல்லையென்றால் என்ன?, தான் மறுத்த வரனுடனே மகளின் திருமணம் நடைப்பெற்றால்தான் என்ன? இப்போது காணக் கிடைக்கும் அவள் மனமகிழ்ச்சி மட்டும் தானே அவருக்கு வேண்டியது.மகளின் நெற்றியில் முத்தமிட்டவர், ஆசீர்வாதமாய் ஜெபித்து சிலுவை வரைந்தார்.
அடுத்து மகளை அணைத்துக் கொண்ட சாராவின் நிலை இன்னும் நெகிழ்வாய், எந்நேரமும் கைக்குள் வளைய வருபவள், தொண தொணவெனப் பேசி,